Tuesday, March 24, 2009





அப்பாஸ் –க்கு அஞ்சலி



‘வரைபடம் மீறி’, ‘வயலெட் நிற பூமி’, ‘ஆறாவது பகல்’,’ முதலில் இறந்தவனின் கவிதை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை நமக்குத் தந்த கவிஞர் அப்பாஸ் அவர்கள் மஞ்சள் காமாலை மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு 20-3-2009 அன்று கோயில்பட்டியில் மரணமடைந்தார்.




ஏதாவது
ஒன்றில்தான் மிதக்க வேண்டியிருக்கிறது
தேநீர்க் கோப்பையில்
மாலை சாய்மானத்தில்
குழந்தையின் சிரிப்பில்
புகைப்பின் தனிமையில்
நீ
மிதக்க முடியாதபகல் ஒன்று
துணைக்கு அழைக்கிறது
தன்
தனிமையின் ஜன்னலுக்கு.

...... அப்பாஸ்


கவிஞர் அப்பாஸின் இந்தக் கவிதை ஏனோ அழிக்கவே முடியாமல் மனதில் பதிந்து போன ஒன்று. கவிஞனின் தனிமை, மிதப்பு, வெளி அனைத்தும் ஓவியமாய் தீட்டப்பட்ட கவிதைகளுள் ஒன்று இது. அப்பாஸை 'வரைபடம் மீறி ', 'வயலட்நிற பூமி ' ஆகிய இரண்டு தொகுதிகளும் அவரது உணர்வின் மின்னல்களை எனக்கு அறிமுகம் செய்திருந்தாலும் அவரை நான் சந்தித்தது ‘உயிரெழுத்து’ இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அவரது ”முதலில் இறந்தவன்” புத்தக வெளியீட்டில் தான். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரது தொகுப்பை வாங்கிய பின் சுதீர் செந்திலுடன் உரையாடிய போது அவரை அறிமுகம் செய்துவைத்தார். முதலில் இறந்தவன் என்ற தலைப்பு மிகவும் பிடித்துப் போயிருந்தது. மரணம் சார்ந்த அந்தத் தலைப்பில் இன்னதென்று சொல்லவியலாத ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. அந்தத் தொகுப்பின் முதல் பக்கத்தில் தனது கையெழுத்திட்டுக் கொடுத்தார். ஒருவித மயக்க நிலை சார்ந்த கவிதைகள் அவை. தனது 49வது வயதில் அவரை மரணம் தனது ஜன்னலிலிருந்து துணைக்கழைத்து தனது வெளியில் அவரை மிதக்க விட்டிருக்கிறது. அவரது மரணம் குறித்த குறுஞ்செய்தி கிடைத்த போது திகைத்து விட்டேன். அவரது “முதலில் இறந்தவன்” தொகுதியின் முதல் பகுதியில் அவரது கையெழுத்து உயிரோட்டமாய் நெளிந்தது. மௌனமாய் அவரது கவிதைகளை வாசிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

Monday, March 23, 2009

அகோர கோரம்




மரணத்தின் ஓலங்களினாலானதாயிருக்கிறது
அங்கு படர்ந்திருக்கும் கனத்த இருள்
குருதியின் கருஞ்சிவப்பாயிருக்கிறது
அந்த இருளின் நிறம்

ரத்த மயமான
அந்நிலம் சூழ் ஆழியிலிருந்து
அலைகளுக்கு பதிலாய்
பிரேதங்களெழும்பிக் கொந்தளித்து
கொடும்மரணத் தடம் பதிக்கின்றன

காலூன்ற இடமின்றி நிலமெங்கும்
உறைந்த ரத்தப் புள்ளிகளிட்டு
தெறித்துச் சிதைந்த மனித நரம்புகளால்
அகோர கோலம் இட்டிருக்கும்
துப்பாக்கியேந்திய கொடுங்கரங்கள்

உணர்வின் வேள்வி குண்டத்திலிருந்து
ரணங்களின் பெரும் ஓலம் எதிரொலிக்க
அக்கினியில் ஆகுதியாயின
மரித்த சடலங்கள்

யுத்தச் சரித்திரங்களின்
சிதிலக் குவியல்களிலிருந்து
மரணத்தின் மஹாகுரூர முகம்
தனது ஆட்காட்டி விரலால்
உதட்டை அகட்டி நாக்கை நீட்டி
அதி பயங்கரமாய் நகைக்கிறது
என் ஈரக்குலை நடுங்கிப் பதற.

உதிரப் புனலில் மிதக்கும்
பிண்டச் சடலங்களின் உயிர்கள்
எழும்பிக் கதறுகின்றன கரங்கூப்பி

நொதித்த சதைக் குவியல்களூடே
மனிதத்துவமற்ற மூர்க்கத்துடன்
அலட்சியமாய் உயர்த்தப்படும்
துப்பாக்கிகளின் விசையழுத்தலில்
ரத்தச் சேற்றின் அடர்ந்த கவிச்சையும்
நிணம் கருகி என்புருகும் நாற்றமும்
எங்கும் படர்ந்திருக்க
பாதாளப் புதைகுழிக்குள்
மரணம் தோய்ந்து கிடக்கின்றது
வெளியேற வழியின்றி
மூச்சுதிணறும் மனித நேயம்

Monday, March 16, 2009





இந்த வாரம் படித்தது
நிசி அகவல் – அய்யப்பமாதவன்
*
காற்றின் வண்ணத்தை ஓவியமாய் தீட்டும் குறும்புத்தனமான முயற்சிதான் கவிதை என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் மேக்ஸ்வெல்.

அமெரிக்கக் கவிஞன் வெண்டலின் வாழ்வைப் புனிதப் படுத்துவதே கவிதை என்கிறார்.

கவிதையை அறிவார்த்தம் சார்ந்து வகைப் படுத்துதல் இயலாதென்றும், அது உண்மையில் கற்பனையின் எரிமலைப் பிழம்பு என்றும், அந்தப் பிழம்பு கொந்தளித்து வெளிபடுதல் ஒரு பூமியதிர்வையே தடுக்கிறது என்று விரிவாகக் கவிதை குறித்துச் சொல்கிறான் பைரன்.

கவிதை என்பது, உணர்வுகளைக் கட்டவிழ்த்தல் மட்டுமல்ல அது உணர்வுகளிலிருந்து தப்பித்தல். அது கவிஞன் தன்னை வெளிப்படுத்துதல் மட்டுமல்ல கவிஞன் தன்னிலிருந்து தப்பித்தல் என்று கவிதை பற்றி அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கின்ஸன் சொல்கிறார்.

நிசி அகவல் இந்த சட்டங்களுக்குள் இருக்கும் ஓவியம் போலத் தெரிந்தாலும், நிஜத்தில் அது எந்த சட்டகத்திற்குள்ளும் சிக்கி விடாது நழுவும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஓரிடத்தில் நிலைகொள்ளாது நகரும் அய்யப்பனின் உணர்வுகள் தம்மைத் தாமே கவிதையாக்கிக் கொண்டிருக்கின்றன என்றுகூடச் சொல்லலாம்.

இரவின் மொழிக்கு ஒரு குரல் இருந்தால் எப்படி இருக்கும்?

இரவின் விளித்தல் ஒரு பறவையில் குரலாக கேட்டிருகிறது அய்யப்ப மாதவனுக்கு.
அதுவும் மயிலின் குரலில் அழைக்கும் இரவு.

அதனால் தான் ”நிசி அகவல்” என்ற அற்புதமான தலைப்பை அவர் தனது தொகுதிக்கு கொடுத்திருக்கிறார் போலும்.

பொதுவாகவே கவிஞர்கள் அனைவருமே இரவுப் பறவைகள் தான்.

நவீன பெண் கவிஞர் ஒருவர் இரவை மிருகமெனப் பார்க்கிறார். ஆனால் அய்யப்ப மாதவனோ அழகியல் சார்ந்து இரவை மயிலாகவும், மயிலின் குரலாகவும் பார்க்கிறார்.
அப்படிப் பார்த்தலோடு நிற்காமல் தானும் ஓர் இரவுப் பறவையாகித் திரிகிறார் இத்தொகுதி நெடுக.

தலைப்பில் மட்டுமல்ல – தொகுப்பு முழுவதிலும் இரவு ஆதிக்கம் செய்கிறது.

இரவு கவிஞரை கிளறுகிறது, அலைக்கழிக்கிறது, போதைகொள்ள வைக்கிறது, பிதற்ற வைக்கிறது, இயலாமையின்.... இருப்பின் வலியுணர்த்துகிறது, மொழியின் போதையேற்றுகிறது, கிளர்த்துகிறது, மோஹிக்க வைக்கிறது, இறுதியில் பித்தாக்குகிறது.

இப்படி, இரவின் படிமங்களாலானதாகவே இருக்கிறது நிசி அகவல். தலைப்புக்கும் தொகுப்புக்குமான இழையோட்டமாக இருக்கின்ற நிசி, கவிஞனின் தொப்புள் கொடி போல அவரை பிணைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட நிசியின் கசிவற்ற கவிதையே இல்லையென்று சொல்லும் அளவுக்கு இந்தத் தொகுப்பெங்கிலும் படர்ந்து கிடக்கிறது இரவு.

இரவோடு இரவாக உறைந்திருக்கிறது காலம்.

நினைவுகள் உரசிக்கொள்கின்றன சிக்கிமுக்கிக் கற்களைப் போல

சிதைந்து போன கவிஞனின் சதைத் துகள்கள் இறந்த காலத்திலிருந்து எழும்பி வருகின்றன மரணப் புழுதியாக.

தேய்ந்து இற்றுப்போன ஒரு புராதன ஓவியம் போல் தன்னுள் படிந்துகிடக்கும் பல காட்சிகளை மீள் பார்த்திருக்கிறார் அய்யப்ப மாதவன்.

இருத்தலுக்கும் பறத்தலுக்குமான போராட்டங்கள், விடியலைப் பற்றி கவலைப்படாத காதலிக்கான நெடுநாளைய ஏக்கம், இழப்பின் வலி, ஏமாற்றங்களின் நெருப்பெரிக்கும் சுடலை மணம், எல்லாமும் விரிகிறது நிசியில் அறுந்து போன, திரைப்படச் சுருள்களாய்.

வண்ணங்களை இசையாய் கேட்கவும், இசையினை வண்ணமாகப் பார்க்கவும் முடிந்திருக்கிற்து அய்யப்ப மாதவனுக்கு.

இரவு எப்படியெல்லாம் விரிகிறது இவரது பார்வையில் என்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயம். யாமத்தில் ராமகிருஷ்ணன் இரவு குறித்து பல்வேறு படிமங்களைத் தந்திருப்பது போலவே, அய்யப்ப மாதவன் - சும்மா போய்க்கொண்டிருக்கும் இரவு, கயிறாய் தொங்கும் இரவு, விடியலில் முறிந்து விடுமோ என அச்சமூட்டும் இரவு, சிகரெட் தீர்ந்து போகும் தருணத்தில் உறைந்து போகின்ற இரவு, கதறி ஓடுகின்ற இரவு, வாடிக்கையாய் இவரைப் புணரும் இரவு, ஆடை கலைக்க வைக்கும் ஓயாத இரவு, மழையில் சிறு சொர்க்கமான அதி நவீன இரவு, போதைச் செடியாய் முளைத்து அட்ர்ந்த வனமான இரவு, இப்படி விதவிதமான இரவுகளை சுயஅனுபவத்தின் இழைகளாக நமக்குக் காணத்தருகிறார்.

இருப்பின் பாரத்தால் கனக்கும் மாலை நேரங்கள், மெல்ல மெல்ல, பசித்தலையும் இருளாகவே மாறிவிடுகின்றன. அந்தச் சிறுபொழுதுத் தனிமையில், சங்கீதம் பெருக்கெடுத்தோட இவரோ புகைவளையங்களுக்குள் சிக்கியபடி இசையில் மூழ்குகிறார். அப்படி சிக்கிக் கிடக்கையில் இவரது புலம்பல்களின் வழியே நீள்கின்ற ஜாமம் புலன்களுக்குள் பிரவேசித்து மூளைக்குள் திறக்கும் கதவின் வழியே வெளியேறிவிட, உறக்கத்தில் உறக்கத்தை அறியாதவனின் தலமாட்டில் அடுத்த நாள் புலர்கிறது.

இரவின் அலைக்கழித்தல்களில் கவிஞனின் மனம் மரணம் பற்றிய உணர்வுகளில் அழுந்துகின்றது. அந்த அழுத்தலின் திணறலானது, ஒளிகசிகின்ற சவப்பெட்டிகளின் மீதான பயணமாகவும், அபினின் தலைசுற்றல்களாகவும் இருக்கிறது. மரணம், இரவு, வாழ்க்கை, காதல், விலைமகள், கடற்கரை, ஒளி, வண்ணம் மது, அபின், போதை, இப்படி எல்லாமும் சேர்ந்து இவரது உணர்வுகளை பித்தக்கொடிகளாய் பிணைத்திருக்கின்றன. அதிலிருந்து இதுவரை கண்டிராத விநோத மலர்களைப் போல உதிர்ந்து கொண்டிருக்கின்றன அய்யப்பனின் கவிதைகள்.

இத்தொகுதியைப் பொறுத்தவரை மூன்று கவிதைகளை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
ஒன்றே ஒன்று என்ற தலைப்பில் அமைந்த கவிதை

“இது எந்த இரவு
எத்தனையோ இரவுகளில்
இரவு ஒன்றுதான்
அந்த இரவில் அப்படி இருந்தேன்
இந்த இரவில் இப்படி இருந்தேன்
எந்த இரவிலும் அப்படியும் இப்படியும்
இருக்கவில்லை
ஒரு நொடி
ஒரு மணி
ஒரு பிறப்பு
ஒரு மரணம்
ஒரு இரவு
ஒரு மாயை

வாழ்க்கையே இரவாகப் பார்க்கப் படுகிறது இந்தக் கவிதையில். தத்துவம் இரவின் வலை போல பின்னப்பட்டிருக்கிறது. தன்னை வாட்டி வருத்தி இம்சிக்கும் இரவொன்றில் அலுப்படையும் இவர், அலுப்பின் உச்சத்தில் எத்தனையோ இரவுகளில் நீயும் ஒன்று என இரவுடனேயே தத்துவம் பேசத் தொடங்குகிறார். நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளையில்லை என்பது போல.... ”அந்த இரவில் அப்படி இருந்தேன், இந்த இரவில் இப்படி இருந்தேன், எந்த இரவிலும் அப்படியும் இப்படியும்
இருக்கவில்லை என்று ஆதங்கம் கொள்கிறார்.

அந்தக் நிலைகொள்ளாத தவிப்பின் கணத்தில், இரவின் பக்கங்கள் கவிதைக்குள் புரளத் தொடங்குகின்றன. கடைசியில் இரவை அளக்கத் தொடங்குகிறது இவரது பார்வை. இரவு மறைந்துவிடும் ஒரு நொடிபோல் தோன்றுகிறது. ஆனாலும் அந்த நொடி அவரைக் கடந்து, பிறகு நீள்கிறது விடியலில் மரணமடைய. அப்போது விடியலில் பிறக்கிறது. அந்த ஒரு ஆகச்சிறந்த நொடிக்குள் பிறப்பும் இறப்புமாய் விரிகின்ற இந்த இரவை ஒரு மாயை என முடிவு செய்கிறார். இக்கவிதையில் இரவு என்பது கவிஞனாகவே இருக்கிறது. கவிஞன் தன்னிலை இழத்தலை மரணத்திற்கு ஒப்பாகவும் அம்மரணத்தின் பின்னாக தானே ஆன்மாவாகிவிடும் கணத்தில் அது பிறப்பாகவும் தோன்ற, தனது மரணமும் பிறப்புமான உணர்வையும் அவ்வுணர்வை உருவாக்கிய இரவை மாயை எனவும் சொல்வது போன்றதொரு கவிதை இது. இந்தத் தொகுதியின் மிக அற்புதமான கவிதையாகத் தோன்றுகிறது எனக்கு.

அடுத்தபடியாக, கடலின் நெடும் பரப்பு இவருக்குள் பல அலைகளை உருவக்குகின்றது.
முக்கியமாக இந்த நூலின் இரண்டாவது கவிதை.
கடற்கரை அருகாமையில்
குடியிருப்பைக் கண்டுபிடித்திருக்கிறாள்
மற்றும் ஆண்களிடம் தப்பிப்பதற்கு

இக்கவிதையில் எதோ தொடர்பறுந்தது போல் சட்டெனப் படிமம் மாறுகிறது. பின் அடுத்துத் தொடரும் வரியில்....

கடற்கரையோரக் குடிலொன்றை
கற்பனை செய்துகொண்டேன்

என்று விரிகிறது கவிதை. இப்படிக் காட்சி மாறுகையில் நுணுக்கமான பார்வை விரிய, இக்கவிதை சொல்லும் ஒடுக்கமான ஜன்னல் துளைகளின் வழியாகத் தெரிந்த குட்டிக் கடலும், குட்டி வானமும் காரணமாக இருந்திருக்கலாம். இந்தக் கவிதையின் கடைசி வரிகளில்.... “கடலே ஓர் பெண்ணாகித் அவரிடத்தில் வருகிறது. அந்தப் பெண், கவிதையின் ஆரம்பத்தில் ஆண்களிடமிருந்து தப்ப கடற்கரைக் குடிலை கண்டுபிடித்த பெண்ணா அல்லது வேறொருத்தியா என்ற தீர்மானம் வாசகனிடம் விடப்படுகிறது. இந்தக் காட்சிமாற்றக் கணபொழுதில், மிகச் சாதாரணமான வார்த்தைகளால் புனையப்பட்ட அக்கவிதை ஒர் அற்புதமான இடத்தைச் சென்றடைகிறது.

கடல் போலவே மீனையும் முக்கிய படிமமாய் கையாண்டிருக்கிறார் இவர். அடிக்கடி மச்சகன்னிகள் மீது சவாரி செய்கிறார். சுட்ட மீனும் பச்சை மீனும் சேர்ந்து மிதக்கின்றன இவரது இரவின் நதியில்.

“செதில் வழி” என்ற தலைப்பில் ஒரு மற்றுமோர் கவிதை.
புரண்டோடும் நீரின் ஊடே
அவளும் ஒரு மீன்
ஆழ் நீரில் அலையுமவள்
விருப்பமாய் துடிக்கும் விரல்களிடையே
நழுவிச் செல்கிறாள்
அவள் நுழைய
திறந்துவிட்டேன் என் நதிப்பாதையை
நீந்தும் சூட்சுமத்தில்
சூசகமாய் செதில்கள்
என் பாறைகளை உரசிக்கொள்ளும் விதத்தில்
புரிந்து கொள்கிறேன்,
கொஞ்சமாவது காதலை

பலமுறை வாசித்து அனுபவித்த கவிதையிது. தனக்கு மிகவும் விருப்பமான பெண் தன்னை விட்டு நழுவும்போது உடனே அவளை மீனாக்குகிறது அவரது கவிதையின் மந்திரக்கோல்., அவளது சுதந்திர நீந்தலுக்காகத் தனது நதிப்பரப்பைத் திறக்கிறார். தனது நதியின் பாறைகளில் செதில் உரசிச் செல்லும் அவளின் சுக உணர்வில் தன்னிலை இழக்கிறார். இந்த வரிகள் நெருடாவின் Unity என்ற கவிதையின் சில வரிகளை நினைவூட்டுகின்றன.

How clear is that the stones have touched time
In their fine substance there is a smell of age
And the water that the sea brings from salt and sleep

காலத்தைத் தொட்டுச் சென்ற கற்களின் நுண்ணிய திண்மையில் படிந்திருக்கும் புராதனத்தின் வாடையும், கடலின் உப்பும் உறக்கமும் நிரம்பிய நீரும் இருகிறதென்று சொல்கின்ற இந்தக் கவிதையைப் போல மீனின் செதிலுரசும் பாறை அவளின் காதலை உணர்த்துவது மிகவும் அழகானதோர் கற்பனை. இழப்புகளின் இடையிலும், துயரமிகு வாழ்வின் ஓட்டத்திலும், ஒரு பெண்ணின் தொடலை விடவும், தொடல் குறித்த நினைவில், ம்னசுக்குள் பெருகிக் கட்டவிழும் உணர்வும், உருகுதலும் காதலின் அதீதமாய் இருக்கிறது. இவ்வளவு நுட்பமான, புலன்சார்ந்த கற்பனை ஆச்சர்யத்திற்குரியதாகவும் இருக்கிறது.

அய்யப்ப மாதவனின் ஐந்தாம் கவிதை தொகுதி இது. ஒவ்வோர் தொகுதியிலும் தன் கவித்துவ நோக்கிலும், மொழியின் ஆளுமையிலும், வெளிப்பாட்டு முறையிலும் தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார் இவ்ர் என்றே தோன்றுகிறது.

பெண் மொழி குறித்தும் உடல் அரசியல் குறித்தும் பரவலான அலைகள் எழும்பியபடியிருக்கும் நவீனக் கவிதை உலகில் ஒரு ஆணின் கவிதைகள் சிக்கலான உணர்வுகளையும்,முரண்பாடுகளையும் அவலங்களையும் சிதிலங்களையும் வெவ்வேறு தளங்களில் பதிவு செய்கிறது.

இந்தக் கவிதைகளைப் போலவே அய்யப்ப மாதவனைக் தனது புகைப்படக் கவிதையாக்கியிருக்கும் செழியனைப் பாராட்டாமல் இருக்க முடியாது. உண்மையில் இந்த அட்டைப் படத்தைப் பார்த்த போது ஆழியில் ரஜனீஷ் புத்தகங்களை தமிழில் போடுகிறார்கள் போலிருக்கிறது என நினைக்கும் அளவுக்கு மாதவனை ஓஷோ-வாக்கியிருக்கிறார் செழியன். அவருக்குப் பிரத்யேகப் பாராட்டுகள்.

பின் அட்டையில் அய்யப்ப மாதவன் இந்தப் நூலில் தேவையற்ற வார்த்தைகளை நீக்கிய விதம் குறித்து இவ்வளவு விலாவாரியாக எழுதியிருக்க எவ்வித அவசியமும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனாலும் பின் அட்டையில் “முழுமையாகும் கவிதைகள் பெண்ணில் வீழ்கின்ற நொடிகளாய் ஆவதில் தான் ஆழ்ந்த கிறக்கம்” எனும் கடைசி வரிகளை வாசிக்கின்ற போது பாரசீக கவிஞனான ரூமியின் Thief of Sleep என்ற தொகுப்பின் சில வரிகள் நினைவுக்கு வருகின்றன

Love is from the infinite, and will remain until eternity.
The seeker of love escapes the chains of birth and death...

உண்மைதான். கவிதை தான் காதல். கவிதை தான் முடிவற்றது. கவிதை தான் நிரந்தரமானது. தேடுபவனே கவிஞன். தப்பித்தலே அவனது கவிதை.

அய்யப்பமாதவனுக்கு கவிதைகளின் மீதிருக்கும் கிறக்கமும் ரூமியின் காதலை போன்றே முடிவற்றது.

Thief of Sleep என்ற ரூமியின் கவிதைத் தொகுப்பின் பின்புற அட்டையும் கூட இதே கருத்தைத்தான் சொல்கிறது.

When you find yourself with the beloved, embracing for one breath
In that moment you will find your true destiny
Moments like this are very very rare

அப்படியோர் அரிதான கணத்தை கண்டடைந்திருக்கும் அய்யப்ப மாதவனுக்கு எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள்.

Saturday, March 14, 2009

இந்த வாரக் கவிதை - “வியியியாவு......”



இருளில் தோன்றும் பூனையின் மொழி
அறிந்தவனாய் இருந்தான்
ஒரு வெள்ளை உடல் குரலில்
கசாப்பு கேட்டு மருகிவிட்டது
அப்போது சுற்றிலும் விளக்குகள் அணைந்து
திறந்துவிட்ட கதவினுள் நுழையும்
கருப்புக் காலடிகள்
இருப்பதுபோல் இல்லாத அவ்வறை
ஹசின் குரல் தடுத்து
நிலைப்படி தாண்டாத மென் அடிகள்
மீன் சமைத்த வாடைநாளில் அதற்கு கிறுக்கு பிடித்திருந்தது
செதில முளைத்து பூனை
நீர் தேடிப் போய்விட்டது
அப்புறம் கள்வர்களுக்குள் குரல் புகுத்தும்
ஒரு நாய் வெள்ளையாய் சிறுத்துவிட்டது
ஆனால் குரைத்தது
சிறு குவளைகளில் ததும்பும் அசையாத
அந்த வெள்ளைக்குரல் தொடர்ந்து
யானியின் ஒலிக்கும் வாத்தியங்கள்
பூனையாய் பூனையாய் கரைகின்றன
வியியியாவு....
....நிசி அகவல்
அய்யப்ப மாதவன்


Saturday, March 7, 2009


மீண்டும் அந்த ரதிசிலை பார்க்கப்போனேன்
கிருஷ்ணாபுரம் ரதி முலை
ஸ்ரீவில்லிப்புத்தூர் ரதி முலை
பார்வதியின் மறைந்த மூன்றாம் முலை
கண்ணகி திருகியெரிந்த திவ்ய எரிமுலை
ஞானப்பாலீந்த உமை முலை
பாலருந்திய என் அம்மையின் அருள் முலை
மறுபடி பார்த்த ரதிமுலை
எல்லா முலையும்
இந்த மழைமாலையில்
முலைமாலையாக
நான் முலைமாலையணிந்த
கொற்றவை இன்று
(தாரா கணேசன்
ஒளிரும் நீரூற்று)
*

Friday, March 6, 2009

பாம்பே ஜெயஸ்ரீயை
தினசரி கேட்க முடிவதில்லை
வாகாய் வந்து மடியில் உட்கார்ந்தாலும்
வண்ணத்துப்பூச்சி பிடிக்கத் தோன்றுவதில்லை
மார்கழிக் குளிரில் வாசலில் பூசணிப்பூ வைக்க
விடியல் விழிப்பு வருவதேயில்லை
வாசலில் கோலம் போட 30 வருடமாய் முயன்றும்
கோலப்பொடி விரலிடுக்குவிட்டு
கம்பியாய் விழுந்ததே இல்லை
தங்கப்பூணிட்டட பெரிய உருத்திராட்ச மாலை
அணியும் ஆசை விடவே இல்லை
இன்னும் ஜேஸுதாசுக்கு கச்சேரியின் போது
கவுரி வீசவும் கச்சேரி முடிந்ததும்
ஏலம் மிளகிட்டு சுடச்சுடப் பாலாற்றிக் கொடுக்கவும்
அம்ஜத் அலிகானுக்கு விரல் நீவி விடவும்
சோனல் மான்சிங்கிற்கு பாதச் சொடக்கெடுக்கவும்
டாலியின் மீசையில் ஊசித்தட்டன் உட்காரவைக்கவும்
மைக்கேல் ஏஞ்சலோவின் டேவிட் உதட்டில்
அழுத்தி முத்தமிடவும்
லலிதா ஜுவலர்ஸின் பனிச்சிலைக்கு பதிலாய்
உருகும் பெண்ணாய் நானிருக்க
திரண்ட மார்பில் வைரம் மின்னவும்
இன்னொரு முறை தொட்டில் குழந்தைக்குப் பாலூட்டவும்
சாகுந்தலத்தை மூலத்தில் படிக்கவும்
கண்ணகியின் சிலம்பைத் தொட்டுப் பார்க்கவும்
கொடைக்கானலின் தற்கொலைப் பாறையிலிருந்து
கூடை கூடையாய் பிளம்ஸ் உருட்டவும்
இன்னும் பல.....உம்....முடிவதேயில்லை
வேண்டாம் முடிய
என்றும் இப்படி
யே யா யோ இவள்.

Thursday, March 5, 2009

I sprout and blossom
along the fertile earth between
the pragma and dogma of love
.
A lone butterfly,
mindless of the noon sun,
is at its rapturous trance.

The taut veena strings are frothy.
The playing finger smears wet ragas.
The melody is much erect
oozing an unending line of

crystal music of lust.


As I place these wonderful thoughts upon my own space, I recall what my fav. poet

Gothey wrote.....

Oh, happy he who still can hope in our day
to breathe the truth

while plunged in seas of error!....
Oh, if I had wings to lift me from this earth,
to seek the sun and follow him!
Then I should see within the constant evening ray
the silent world beneath my feet,
the peaks illumined, and in every valley peace,
the silver brook flow into golden streams.
No savage peaks nor all the roaring gorges
could then impede my godlike course.
Even now the ocean and its sun-warmed bays
appear to my astonished eyes.
When it would seem the sun has faded,
a newborn urge awakes in me.
I hurry off to drink eternal light;
before me lies the day, behind the night,
the sky above me, and the seas below.
A lovely dream; meanwhile the sun has slipped away.
Alas, the spirit's wings will not be joined
so easily to heavier wings of flesh and blood.
Yet every man has inward longings
and sweeping, skyward aspirations
when up above, forlorn in azure space,
the lark sends out a lusty melody;
.....


My Dogma of Love

A silent battle happens within
I am my own enemy
with whom I am engaged in this fierce battle.
regardless of who wins, victory is mine!

The soul search may or not yield result
Nevertheless, constant is the search
to discover what makes me think
of a greater inner-self?

Saints who preach doctrines

are great souls, of course
I am no saint, but rebellious.
Neither I wish to relate to past
nor to know the future
for, they are labyrinths

Preach, let me not
but comprehend love's magnitude.

Invisible droplets of clouds behold
Yet only showers make them visible.
Invisible is Love
so, Shower!

Unselfish is Love
How would the earth bloom
if clouds are selfish?
Let not love be held fervently
for, its joy lies in the giving.
Be a cloud to shower love
Be thirsty to drink from its ocean
for, Love is recycle

Love neither has directions nor limitations.
for, love is boundless.
Infinite is Love
For, it is natural, beautiful and benevolent.

It does not belong, for, it is, its own.
It could not be controlled
for, it is, its own Master
Such a Master is never a slave.
Passion, fantasy and dreams
are its true disciples
it walks in majesty with them
who follow it with reverence.

It is supreme and reigns emotions
It is the mighty Emperor
of every single living being
Many wish to possess it,
Nevertheless, it could not be,
for, it is omnipresent.

It could not be caged
for, its wings are too wide.
It could not be imprisoned
for, its magnificence is gigantic.
is stands majestic with its
foot beneath the earth
and head beyond the sky
who could build a wall around it?

Comprehend love.
Worship love with blossoming emotions.
It doesn't need a Temple, Church or a Mosque
or any traditional ceremonies to please
It only blooms in sacred emotions.

Though immense,
into the tiny walls of a willing heart,
it could easily fit itself
shrinking itself as a powerful atom.
Remain it will as long as it wishes
and leave as it desires.

No force could hold it,
for, it is a force by itself.
It only yields to softer feelings,
smoother words
and submits itself willfully.

Visualise its magnitude.
Listen to its sweeter melody
feel the joy it fills in you,
yet, do not cage it.

Monday, March 2, 2009



இந்த வாரம் படித்த புத்தகம்
அகம் புறம் (வண்ணதாசன் / விகடன் பிரசுரம்)



தூரத்தில் எரிந்து கொண்டிருக்கிறது ஒரு நெருப்பு. வெள்ளை, மஞ்சள், நீலம், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு, சிவப்பு நிறங்களுடன். அந்த நெருப்பு நெருங்கி வருகிறது. அருகில் நெருங்க நெருங்க பெரும் நெருப்பாகிறது. கடலில், காற்றில், நிலத்தில், வெளியில் எங்கிலும் அந்தத் தீ. பஞ்ச பூதமெரிக்கும் ஓர் பெரும் பூதம். எரிகிறது எல்லாமும் அத்தீயில். அப்படி ஓர் தீ “அகம் புறத்தின்” ஓர் அத்யாயத்திலும் எரிந்தது. எழும்பிய ஜ்வாலையின் சிதறலில் இருந்து புழுக்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. பெயர் தெரியாத விதவிதமான புழுக்கள். கடலில் பாதி மூழ்கியிருந்தது நெருப்பின் கோளம். அதிலிருந்து ஊர்ந்து கடல் பரப்பிலெங்கும் நெளிந்த்தன புழுக்கள். கடற்கரையில் காலிடருகிறது.. குனிந்து பார்த்தால் எங்கும் சிதறிக்கிடக்கின்றன மண்டையோடுகள். சில கால் பட்டு உருண்டோடுகின்றன. அவற்றின் கண் குழிகளிலிருந்து நெளிந்து நகரும் புழுக்கள். கடலின் பரப்பிலிருந்து பெருஞ்சிறகு விரித்து வருகிறதொரு கடற்பறவை. அது மனங்கொத்தி. புழு பொறுக்க வருகிறது. புழுக்களின் பெயர் அபிதா. . . கருப்பட்டி . . . கரியன் . . . இன்னும் என்னென்னவோ.

அகத்திலிருந்து புறத்திற்கும் புறத்திலிருந்து அகத்திற்கும் இடையே ஒரு ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறது. வளைய வளையாமாய் புகைச்சங்கிலியில் ஆடுகிறது அந்த ஊஞ்சல். கீழிருந்து எரியும் தீ நாக்குகள் காளிங்கன் தலைபோலெழும்பி ஊஞ்சலைத் தீண்டுகின்றன. அதில் அமர்ந்து ஆடியபடியிருக்கிறேன்.

சிதைந்த மனவெளிகளிலிருந்து மீள்வது சுலபமல்ல. நிகழ்ந்த நிகழ்வுகளும், நிகழ்த்திக்கொண்ட நிகழ்வுகளும் வாழ்வின் நெரிசலான இடிபாடுகளுக்கிடையிலான படிமங்களாகிப்போகின்றன. எப்போதவை அகத்திலிருந்து புறத்தில் வந்து விழும் என்று தெரிவதேயில்லை. தானாகவே இயல்பாய் வெளிப்படுமோ அன்றி ஏதேனும் தாக்கம் உருவாக்கும் அதிர்வுகள் வெளிக்கொணருமோ தெரியாது. ஆனால் என்றாவது எப்போதாவது எப்படியாவது வெளிப்படும்; அக அடுக்குகளின் சிதிலங்கள் சில்லுச் சில்லாகவோ, தூள் தூளாகவோ அல்லது தூசு மண்டலமாகவோ. அப்படிச் சில துகள்களை என்னுள்ளிருந்து வெளித்தள்ளியிருக்கிறாள் அபி.

துயில் நீங்காத அந்தக் காலை ஓசைகளற்று விஷநீலத்தில் விடிகிறது. போக்குவரத்து தொடங்குதற்கு முன்னால் வெறிச்சிட்டிருக்கிறது அந்தச் சாலை. முக்குப்பிள்ளையார் கோவிலில் சவுண்டு ஸ்பீக்கர் கட்டியிருக்கிறார்கள். விடிந்தால் விநாயகர் சதுர்த்தி. கோல்கேட் பல்பொடியின் நுரை கடைவாயில் வழிய அதன் அசட்டு இனிப்புச்சுவையை அனுபவித்து, துப்ப மனமின்றி பராக்கு பார்த்தபடி நிற்கிறேன். நான்கு வயசு இருக்கும் எனக்கு அப்போது. ”துப்புடீ” என்று சுளீரென்று முதுகில் அறை விழ நான் வீறிட்டழுத கணம் இன்னோர் அலறலும் கேட்கிறது

தெருவின் முக்கில் நின்றுகொண்டு பதற்றமுடன் பார்க்கிறாள் பாட்டி. ”கரியன் எரிஞ்சு போயிட்டான்”. ....... யாரோ சொல்கிறார்கள். பல்ப்பொடிச் சாற்றை விழுங்காது துப்பிய வருத்தமும் முதுகில் விழுந்த அடியையும் தாண்டி கரியன் எரிஞ்சு போய்ட்டான் என்ற வாக்கியம் உறைக்கிறது. அவசரமாய் வாய் அலம்பிவிட்டு என்னையும் தூக்கிக்கொண்டு விரைகிறாள் பாட்டியம்மா. திண்ணையில், வெளியில், வாசலில் எல்லாம் கூட்டம். வாசலில் பூம்பாடை கட்டத் தயாராய் இருக்கிறது. பாட்டி விசாரிக்கிறாள் தெருவில். திரும்பி வந்து என்னை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டுப் போகிறாள். என் நினைப்பு மறுபடியும் பல்பொடியின் சுவைக்குச் செல்கிறது. அப்புறம் யார் யாரோ பேசுகிறார்கள். எதுவும் ஞாபகமில்லை ”எரிஞ்சு போய்ட்டான் கரியன்” என்பதைத் தவிர.


கரியன் . . . காலில் சங்கிலி கட்டியிருக்கும். மனநிலை சரியில்லாத கரியன். ஏன் அவனுக்கு அந்தப் பெயர் என்றும் தெரியாது. பிள்ளையார் கோயிலுக்கு காலை இழுத்து இழுத்து அவனை பெரிய மீசை வெச்ச ஒருவர் கூட்டி வந்தது தெரியும். சாமியைப் பார்க்காமல் என் கண்ணும் மனசும் அந்த சூம்பிய காலின் சங்கிலியிலேயே கோர்த்துக்கிடந்தது ஞாபகமிருக்கிறது. “ஏன் பாட்டி கரியனை கட்டியிருக்காங்க”ன்னு கேட்டதற்கு ”பாவமூட்டை”ன்னு பாட்டி பதில் சொன்னது ஞாபகமிருக்கிறது. அவன் மண்ணெண்ணை ஊத்தி பத்த வச்சுக்கிட்டான்னு பின்னாடி பாட்டி சொல்லித் தெரிந்தது என் பதினைந்தாவது வயதில். மூள சரியில்லாத பிள்ளை, எப்படித்தான் பத்தவெச்சுக்கிட்டானோன்னு பாட்டி புலம்பினாள். நினைவு தெரிஞ்ச பின்னாளில் நினைவு தெரியா வயதில் நடந்த அந்த சோகம் தொடர்ந்தது.

ஆமாம் சோகம் தான் அது. உள்ளுக்குள் பிழியும் உணர்வு தானே சோகம். அதற்கு உறவு தேவையில்லை. இப்போது இரண்டு வருஷத்துக்கு முன்பு பாட்டிக்கு நினைவு தவற ஆரம்பித்த போது (டிம்னீஷியா) அடிக்கடி வெளியே போக ஆரம்பித்தார். ஒருமுறை தெருவை விட்டு விலகிப்போய் வீட்டுக்கு எப்படி வருவதெனத் தெரியாமல் சுற்றியலைந்து, நாங்கள் ஆயிரம் சாமியை வேண்டிக்கொண்டு கடைசியில் கண்டு பிடித்தோம். பிறகு அவர்கள் வெளியில் போகாதிருக்க வாசற்கதவைப் பூட்டி வைத்தோம். . திடீரென்று பூட்டிய கேட்டை உலுக்கி மாரில் அறைந்து கொண்டு கத்தினாள் பாட்டி “கரியன் மாதிரி சங்கிலி போட்டு பூட்டுடீ. நானும் பத்த வச்சுண்டு எரிஞ்சு போறேன்”ன்னு. அப்போது வந்தான் கரியன் மறுபடியும். முகம் ஞாபகமற்ற கரியன். ஆனால் கருகிப்போன முகம் இருந்தது இப்போதென் ஞாபகத்தில் அவனுக்கு. கருகிய விறகுக்கட்டையாய் கை கால்கள். ஆனால் சங்கிலி மட்டும் அப்படியே அதில் பிணைந்தபடி நிழலாடினான். அன்றிலிருந்து பூட்ட முடியாது போனது பாட்டியை என்னால். இன்றைக்கும் இந்தப் புத்தகத்தின் உள்ளிருந்து எட்டிப்பார்க்கிறான். அபியின் கையில் இன்னொரு பூவாக. அவளின் கைச்செம்புக்குள் தளும்பும் பாலாக.

பிறகு, 10ம் கிளாஸ் படிக்கிறப்போ சுகன்யா. கன்யாகுமரியின் சூர்யோதயம் மாதிரி முகம். பூத்துக்குலுங்கும் மஞ்சரி மாதிரி அடர்ந்த கண் இரப்பை. கண்ணதாசனின் ”சின்னக்குடை போல் விரியும் இமையும்” என்ற வரி இவளைப் பார்த்துத்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். சுருள் சுருளான கேச அடர்த்தியில் நேர் வகிட்டு வெண்மை பளீரிடும். சோழியை குலுக்கிப் போட்ட மாதிரி சிரிப்பு. சிரித்து முடிக்கும் போது தொண்டைக்குள்ளிருந்து ஒரு கீச்சு இழை பிரிந்து மறுபடி தொடர் சிரிப்பாய் விரியும். காப்பர் சல்பேட் நீலத்தில் தீபாவளிக்கு தாவணி வாங்கி என்னையும் அதே வண்ணத்தில் வாங்கச்சொல்ல, நான் துணிக்கடையே தலைகீழாய்ப் புரட்ட அம்மாவின் முகம் இறுகிப் போக, அப்பாவோ பல்லைக் கடிக்க, ஒருவழியாய் கிடைத்தது அந்த நீலம். அந்த வண்ணத்தை அவள் உடுத்தியிருந்த போது மீன் கொத்தி போலிருந்தாள். இரட்டை முந்தானை இடுப்பில் சொருகி கருப்பு சீட்டியில் அதே வண்ணப் பூ போட்ட பாவாடையை லோஹிப் கட்டி “பின்னே... பரையு” என்று மூக்கால் பேசிய மலையாளம், ஒரு கவிதை. பள்ளிகூடத்தில் எதிர்சாரி வீட்டில் துரை. அவன் கற்றது தமிழ் எம் ஏ. அவன் அவளுக்குக் கொடுத்த முதல் கடிதம் தான், நான் வாசித்த முதல் கவிதை. ஒரே வர்ணனை. நான் அவளுக்குப் படித்துக்காட்ட அவளது கன்னமெல்லாம் பிளந்த மாதுளை. கலகலத்த சிரிப்பு. வெட்கம் கலந்த சிரிப்பு. மறுபடி மறுபடி படிக்கப்பட்ட கடிதம் அது.

(எனக்கும் கூட பக்கத்து வீட்டு கராத்தே பையன் [ப்ரூஸ்லீ மாதிரி இருப்பான்] மாடியிலிருந்து எட்டாய் மடித்து நடுவிரல் நுனியால் விட்டெறிந்த கடிதம், முற்றத்தில் வீழ அம்மா பியர்ஸ் சோப்பால் முகம் அலம்பும் போது தோய்க்கிற கல் பக்கத்தில் அது விழுந்தது. அதில் சினிமாவுக்கு போகலாமா என்று மட்டும் இருக்க சீ என்று இருந்தது வேறு விஷயம்). இப்படி கவிதை சொட்ட எனக்கும் கடிதம் வந்திருந்தால் நானும் சுகன்யாவாகியிருபேனோ என்னவோ?

சுகன்யாவுக்கு கரைந்து கரைந்து கடிதம் வந்தது. மறைந்து மறைத்து படிக்கப்பட்டது. அடிக்கடி ராமஜெயம் மாதிரி .... மதுரை, Madurai என்று எழுதுவாள் அவள் கிளாஸில் இருக்கும் போது. அதில் துரை இருப்பது அப்புறம் தான் தெரிய வந்தது. ”என்னடி சும்மா கடிதம். படிக்கற வழியைப் பாரு. பரீட்சை வந்தாச்சு” என்று நான் கண்டித்த போது கூட adolescenceஐ மீறி எனக்கு அக்கரை இருந்தது அவளிடம். பரீட்சைக்கு நாலு நாள் முன்னாடி பிரேயர் முடிந்ததும் வனிதா என் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னாள் - ”சுகன்யா மண்ணெண்ணை ஊத்திக் கொளுத்திக்கிட்டாளாம்” என்று.. அவ்வளவுதான் உருவிக்கொண்டது நிலம். மத்யானம் அவள் வீட்டுக்குப் போனோம். யாரும் இல்லை வாசலில். அவள் அக்கா மட்டும் உள் கூடத்தில் இருந்தாள். உள்ளே போகவே பயமாயிருந்தது. மடப்பிறை விளக்கு கூட அவளை எரித்த மிச்ச நெருப்பாய் தெரிந்தது. “சுகன்யாவுக்கு என்னாச்சு” என்று கேட்ட போது வார்த்தையே வரவில்லை. தேவர் மகனில் ரேவதிக்கு வந்தது போல் “வெறும் காத்து தான் வந்தது”. “வாங்கடீ வாங்க. என்னாச்சுன்னு கேக்க வந்துட்டீங்களா. உங்களுக்குத் தெரியாதா அந்த நாயி லவ் பண்ணினது...” என்று அக்கா ஆத்திரமாய் பேச மறுபடி பயம் தொற்றிக்கொண்டது அவளுக்கு என்னவானது என்று. முந்தய நாள் மாலை அவள் என்னிடம் கடைசியாய் சிரித்தபடி கையசைத்துப்போன நினைவு வர உள்ளுக்குள் புழு குடைந்தது. அப்புறம் தெரிந்தது அவள் கொளுத்திக் கொள்ளவில்லை மண்ணெண்ணையைக் குடித்து விட்டாள் என்று. உடல் முழுக்க பொறுபொறுவென அக்கி கிளம்பி வலி பொறுக்க முடியாமல் ஜி.ஹெச். கொண்டு போன பின் அடுத்த நாள் அவளை பாலக்காடு கொண்டு போய் விட்டார்களாம். “சனியன பாலக்காடு கொண்டு போவானேன். அவ எரிஞ்சு தொலச்சிருந்தா ஒரேடியாய் தலமுழுகியிருக்கலாம். இப்போ எத்தன அவமானம் அவளால................” - அக்கா சொல்லிக்கொண்டிருந்தாள். அதற்குப் பிறகு நான் அவளைப் பார்க்கவேயில்லை. மறுபடியும் மண்ணெண்ணை வேறு ரூபத்தில் எனைத் தொடர்ந்தது சுகன்யா மூலமாக.

இன்னும் அப்பாவின் நண்பர் மகனது மனைவி கல்யாணமான ஆறாம் மாதம் வீணாக கணவனின் மீதான சந்தேகத்தில் ஒரு விடியல் பொழுதில் ஊற்றிக்கொண்ட மண்ணெண்ணை..... ஆஸ்பத்ரியில் துடிக்கத் துடிக்க கருகிக்கிடந்த போது அத்தான்... அத்தான்.... தப்பு பண்ணிட்டேனே... காப்பாத்துங்க அத்தான். உங்கள விட்டுட்டுப் போய்டுவேனா அத்தான் ... என்று கதறியது. எவ்வளவு முயன்றும் அவளைக் காப்பாற்ற முடியாது போனது. ஜான்ஸியின் குரலின் வழியே அந்த நெருப்பும் துரத்திக் கொண்டேயிருக்கிறது.

முன்பு வேலை செய்த அலுவலகத்தில் எனது நண்பர் பத்தரைக்கு வருகிறார். பாஸ் திட்டப் போகிறார் என்று ரிசப்ஷனிஸ்டிடம் சொல்லிக்கொண்டே கையெழுத்திடுகிறார். அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது அவளுக்கு. “அப்பா இருக்காங்களா ஆன்டீ. . . அம்மா செத்து போய்ட்டாங்க” - மறுமுனையின் குரல் கேட்டு அதிர்கிறாள் அவள். என்ன சொல்லப்படுகிறதென்று விளங்கியும் விளங்காமலும் பதட்டமும் குழப்பமுமாய் “சார் உங்களுக்குத் தான் போன். உங்க வீட்லேந்து. உங்க சின்னப் பொண்ணு பேசறாள்”. கொடுக்கப் படுகிறது ரிசீவர். பதற்றம் இடம் மாறுகிறது. ஓட்டமும் நடையுமாய் அவர் விரைய, .... புடவையில் தொங்கி..... போனது ஒரு உயிர்.

இப்படி மனோதளத்தில் அதிர்வேற்படுத்திய நெருப்புகள் எத்தனை? மரணங்கள் எத்தனை? அப்படி தீக்குளித்த அல்லது குரள்வளை உடைத்து தொங்கிய அல்லது ஆஸிட் குடித்த அல்லது தண்டவாளத்தில் சிதைந்த எல்லா முகங்களின் மரணக்குறியீடாய் விகடனில் வெள்ளை விழிப்படலம் பிதுங்கி உதட்டில் மரணச்சிரிப்பு வழிய தலைசாய்த்திருந்தது அந்த பொம்மை. தொடரும் வலிகளின், அல்லது வலி உணர்தல்களின் பிரதிபலிப்பாய். கண் முன்னே நிழலாடிய பிம்பம் மறைய வெறும் வெய்யிலில் இன்னும் கண்ணுக்குத் தெரியாத அவர்களின் நிழல் துரத்துகிறது என்னை. அந்த முகங்களின் பிரதிமையை வைத்து குடைந்து கொண்டிருக்கிறது அகம் புறத்தின் எழுத்துப் புழு.

மலை முகட்டில் எதிரொலிக்கும் குரலாக இருக்கிறது அந்த புத்தகத்தின் வாக்கியம்.

“பின் எதற்காக இப்படியெல்லாம் தீக்குளிக்கிறோம்?
அடைந்ததாலா அடைய முடியாததாலா”?

ஐயோ... என்ன செய்து விட்டார்கள் இவர்கள் நமக்கு. நாம் தான் என்ன செய்திருக்கிறோம் இவர்களுக்கு. பிறகு ஏன் தொடர்கிறார்கள் இவர்கள் நம்மை, மறதிகளின் பச்சைக்குதிரை தாண்டி.

நேபாளின் தட்சிண்காளி கோவிலில் தரிசன வரிசையில் நான் நின்ற போது கழுத்தறுபட்ட வெள்ளாட்டுக்குட்டியிலிருந்து பீச்சியடித்த அடர்கரும் உதிரம் உதரவிதானத்தில் திடுக்கிட்ட பதற்றத்தை உருவாக்க, குமட்டியது அக்குருதி வாசம். அதுவரை உள்ளங்காலில் பிசுபிசுத்த சிவப்புப் பொட்டுகள் நான் நினைத்தது போல் குங்குமக் கரைசல் அல்ல எனத் தெரிந்த போது மரணம் கருப்பாகத் துள்ளிக்கொண்டுதான் இருந்தது. ருத்திரமாய், உருவம் கூட இல்லாத கல்லில் வடிவமழிந்து போன தட்சிண்காளியின் கற்பிரதிமையில், அந்த விகடன் படத்தின் மண்சுதைச் மரணச்சிரிப்பு தெரிகிறது கண்முன் இப்போது

இதே மரண அவஸ்தையை மறக்க முடியாமல் அடிக்கடி என்னுள் கொண்டுவரும் இன்னோர் ஓவியம் மனுஷ்யபுத்திரனின் ‘மணலின் கதை’ கவிதைத் தொகுதியின் அட்டைப்படத்திலிருந்தது. ஒரு கரம் அழுத்திய அந்த முகத்தின் ‘மரண விகாரம்’ என்றுமே மறக்க இயலாததாயிருக்கிறாது.

புத்தனை எரித்துக் குளிர் காய்ந்த ஜென் துறவியைப் போல் மரணத்தில் எரிந்த் குளிர்காய்கிறார்களோ இவர்கள்.? எரிதலின் நெருப்பும் எரித்தலின் நெருப்பும் ஒன்றே தானே? அவர்களைக் காவு கொண்ட எரிதலின் நெருப்பு தான் நம் உணர்வுகளை எரித்தலின் நெருப்பா? விலக்கி விரட்டிய பின்னும் திரும்பத் திரும்ப சுற்றிச் சுற்றிக் கண்களை வட்டமிடும் சாக்கடை ‘ஙொய்’ மாதிரி – அல்பாயுசுத் துகள்கள் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன என்னை. கூடவே அந்தப் பெயர் தெரியாப் புழுக்களும் கர்ணன் தொடை மாதிரி என்னைத் துளையிட்டுக்கொண்டேயிருக்கிறது.

”எவருக்கும் பிரியமற்ற
எருக்கம் பூவின் அடுக்காக
அவிழ்கிறது ஞாபகச்சுருள்”
(ஒளிரும் நீரூற்று, தாரா கணேசன்)

அப்படித்தான் அவிழ்கின்றன எனது ஞாபகச் சுருள்களும் அபியைப் பற்றி அகம் புறத்தில் படித்த பிறகு.

சேரனின் ”இப்பொழுது நீ இறங்கும் ஆறு” போல் இறங்கிக்கொண்டிருக்கிறேன். இறங்கும் நதி தானே அருவி. நதிகளெல்லாம் அமைதியாய் ஓடுகின்றன. அருவிகளெல்லாம் தடதடவெனப் பொழிகின்றன. எல்லாம் சென்று ஒரு கடலில் கலக்கின்றன. நனைவர்களைப் போகவிடாமல் இறுத்தி வைக்கின்றன தமது ஈரத்தினுள். மலைகளில் எரிகிறது தீ. வேள்விகளில் எரிகிறது நெருப்பு. விளக்குகளில் குறுஞ்சுடர். விரும்பி நெருங்குபவர்களை எரிக்கிறது நெருப்பு. விழி சிவக்க அசையாமல் சிலையாகி நிற்கிறேன். ஞாபகங்கள் என்னைத் தன்னுள் கரைத்துக்கொள்கின்றன.