Thursday, June 25, 2009

SOLITARY





தனி (SOLITARY)
A Short Film by Iyyappa Mathavan


I didn't have my films as an outlet for all the different sides of me, I would probably be locked up.”

- Angelina Jolie

எல்லாக் கவிஞனுமே எப்போதும் தனக்குள் ஒரு தனிமையைச் சுமந்து கொண்டு தேடலுடன் அலைந்து கொண்டிருக்கிறான். அற்புதமான கவிதைகளின் உலகில் உலவும் அய்யப்ப மாதவன் இயக்கி செழியன் அவர்களால் குறும்படமான படமாக்கப்பட்டிருக்கும் தனி (solitary) ஜூன் 20ம் தேதியன்று சென்னையில் திரையிடப்பட்டது.

இன்றைய தமிழ்த் திரைச் சூழலில் காட்சி ஊடகத்தின் முக்கிய வடிவமான குறும்படத்தினை அய்யப்ப மாதவன் இயக்கியிருப்பது கவனத்திற்குரிய விஷயமாகும். தனியாக இருக்கும் ஒரு மனிதனைப் பற்றிய பத்து நிமிடக் குறும்படம் இது. பத்து நிமிடக் குறும்படமாயினும் படைப்பாக்கத்தின் திறமையினை முழுமையாய் வெளிப்படுத்தியிருக்கிறது ‘தனி’.

இந்தக் குறும்படத் திரையிடல் நிகழ்வினை ஆழி பப்ளிஷர்ஸின் உரிமையாளர் திரு செந்தில் நாதன் தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் சீனு ராமசாமி, எழுத்தாளர் சாரு நிவேதிதா, கவிஞர் தாரா கணேசன், எழுத்தாளர் அ. மார்க்ஸ், கவிஞர் யவனிகா ஸ்ரீராம், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். சிறப்புரை ஆற்றிய அனைவருமே இக்குறும்படம் மிக நல்ல முயற்சி என்றும் இன்றைய வியாபார மயமாகிவிட்ட திரைச்சூழலில் இது போன்ற திரைப்படங்கள் வருவது அவசியமென்ற கருத்தையே வலியுறுத்தினர்.

நல்ல திரைப்படம் எடுப்பதையே தனது வாழ்வின் குறிக்கோள் என்று கண்ணில் கனவுகள் மின்னச் சொல்லும் அய்யப்ப மாதவனின் இந்தக் குறும்பட முயற்ச்சி பாராட்டுக்குரியது. ஏற்கனவே இவரது கவிதையொன்றை “இன்று” என்ற தலைப்பில் செழியன் அவர்கள் குறும்படமாக்கியிருக்கிறார். இதில் அய்யப்ப மாதவனே நடித்தும் இருக்கிறார். இப்போது திரையிடப்பட்ட ‘தனி’ குறும்படம் திரையுலகின் நெடுங்கரையில் இவரது காலடியை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

இந்தப் படத்தினைப் பார்த்த் போது, ஜெர்மானியின் தத்துவ ஞானியுமான ப்ரட்ரிக் நீட்சே-யின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

“உனது மிகவும் அடர்ந்த தனிமை இரவொன்றில் துர்த்தேவதையொன்று எவருமறியாமல் உனைப் பிந்தொடர்ந்து “நீ வாழும் இந்த வாழ்க்கையினை மறுபடியும் எண்ணிலடங்காத முறைகள் நீ வாழவேண்டும்; உனது ஒவ்வோர் வலியும், மகிழ்வும், சந்தோஷமும், எண்ணங்களும், பெருமூச்சுகளும் உன்னிடத்து நீ வாழ்ந்த வாழ்வின் அத்யாயம் போல அதே வகை முறையில் அதே குறிப்பிட்ட வரிசை ஒழுங்குடன் திரும்ப வரவேண்டும்; வாழ்வின் என்றும் மாறாத மணற்கடிகையினை, மிகநுண்ணிய புழுதிகளுடன் உன்னோடு மறுபடி மறுபடி திருப்பி வைக்கப்படவேண்டும்; - என்று சொல்லுமேயானால், அப்போது நீ உன்னை கீழே வீழ்த்திக் கொண்டு பற்களை நரநரவெனக் கடித்தபடி அந்தப் துர்த்தேவதியை சபிப்பாயா? அல்லது இதனைவிடவும் தெய்வீகமான வார்த்தைகளை இது வரையில் நான் கேட்டதேயில்லையென பதிலிறுப்பாயா? (“What if a demon were to creep after you one night, in your loneliest loneliness and say “ This life which you live, must be lived by you once again, innumerable times more; And every pain and joy and thought and sigh must come again to you all in the same sequence; The eternal hour-glass will again and again be turned and you along with it, dust of the dust. Would you throw yourself down and gnash your teeth and curse that demon? Or would you answer, “Never have I heard anything more divine”.)

நீட்சே சொல்லியிருப்பதைப் போல, இந்த மனிதனை அப்படியொரு துர்த்தேவதை துரத்துவது போலத் தான் தோன்றியது. இவன் தனது வாழ்க்கையின் தனிமையை முதல் முறை கடக்கிறானா அல்லது சபிக்கப்பட்ட அந்தத் தனிமையினை மறுபடி கடக்கிறானா அல்லது தனிமையை தனிமையில் தனிமையாய் கடக்கிறானா – இவனது தனிமைக்கு தனிமைதான் துணையா என்றெல்லாம் யோசிக்கத் வைக்கிறது.

தனியாய் இருப்பதற்கும் தனிமைக்கும் மிகப்பெரிய வித்யாசம் இருக்கிறது. தனியாய் இருத்தல் என்பது being alone தனிமை என்பது being lonely. இந்தப் படத்தில் இரண்டும் கலவையாகி a solitary solitude ஆக மாறியிருக்கிறது. படமாக்கப் பட்டிருக்கும் விதத்தில் தனிமை குறித்த பயம், விரக்தி, கையாலாகாத வெறுமை, தனக்குத் தானே பேசும் மனநிலை பாதிப்பு, இயலாமை குறித்த வெறுப்பு, சொல்ல இயலாத சோகம், எல்லாமும் எல்லாமும் ஒரு சுழல் போல நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன.

விஸ்வநாதன் கணேசன் நடிப்பில் அய்யப்ப மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தனி’ இந்தக் குறுப்படத்தினை செழிய்ன் அவர்கள் அற்புதமான படமாக்கியிருக்கிறார்.

No comments:

Post a Comment