Sunday, August 1, 2010


பிறந்தநாள் வாழ்த்து
மகத்தில் பிறந்தவோர் மங்கலத் திருமகள்
அகத்தும் புறத்தும் அழகின் பேரொளி
மிகுத்துச் சிறக்கும் மெல்லிய பசுங்கிளி
தொகுத்து வைத்த தூயதோர் பூச்சரம்
வகுத்தலும் கழித்தலும் அற்றதாய்க் காதலின்
வாய்மையைக் கூட்டும் பெண்மையின் பெருக்கல்
ஜகத்தினை வெல்லும் நுண்ணறிவேற்பினும்
செருக்கே கொள்ளாத ஞானப்புலமையைப்
பெண்மையில் பூசிய செந்திரு
பூவினும் மெல்லிய பூங்கொடி
ஆய கலைகள் அனைத்தும் கற்றவள்
கற்றதைப் பெற்றிட முற்றிலும் தருபவள்
உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியதோர்
உருவினைக் கணவனாய் உடனுற்ப் பெற்றவள்
அலகிலா அழகுடன் அறிவுடன் பெண்ணையும்
ஆணையும் தன்னுடை மக்களாய் உற்றவள்
செஞ்சுடர்த் தாமரை சீர்மிகு திருமகள்
இத்தனை பெற்றவோர் ஏற்றப் பெருக்கினை
என்றும் அழிந்திடா ஏகச் சுடரினை
அத்தனை எம்மான் அனந்தனின் நிழலாய்
அடி தொழுதேத்தி அமைகிறேன் என்னுடை
நித்திய வேதமே நிரந்தர நதியே
நீடு நீ வாழிய, நிமலனும் அருள்கவே