Monday, October 26, 2009


கடவுளின் மறுவுரு

எதையும் எழுதாமலேயே நேரம் கடந்துவிட்டது
கடந்தது குறித்து வருந்துவதிலேயே
இன்றும் கழிந்துவிடும்
கடந்தது இறந்தது.
இறந்தது கடந்தது.

நேரத்தின் கலத்தைச் செலுத்துபவன் எவன்.
யமன் ஒன்றும் நமது நேரக்காப்பாளன் இல்லை
மரணம் கூடக் கடைசி மணி அல்ல,
இருப்பினும் வாழ்வு
மரணத்தின் சிறு அசைவிலிருக்கிறது

பசியெடுக்கும் போது விழுங்கும்
அந்த விநோத விலங்கைப் பார்திருக்கிறாயா நீ

வாழ்வின் சகல துடிப்புகளுடனும் உடல்
தலை புழுத்த மண்டையோடு
வலக்கையில் சாத்தானின் வால் போன்றொரு தூண்டில்
இடக்கையின் மணிக்கட்டில் கிண்கிணித் தொட்டில்
கண்களின் பொந்துகளில் ஒளிந்திருக்கும் முற்றுபெறா இரவு
மூன்றாம் கை வலியற்றுத் உயிர் துண்டிக்கும் கோடாரி
மூன்று கைகளும் மூன்று காலங்குறிக்க
தோளில் காகத்துடன் புஷ்பகவிமானத்தில் அமர்ந்திருந்த அதனை
ஒரு புராதனத்தின் அகழ்வில் சந்தித்ததாகக் கனவில் வந்தது

உரையாடிப் பிரிந்த போது கரப்பன்கள் ஊர்ந்த வாயுடன் முத்தமிட்டது
நிலம் நடுங்கிப் பிளந்த பின்னும் உயிரோடிருந்தேன்

ஆயினும் அக்கணத்தில்
வாழ்வின் தத்துவக் குழப்பங்கள் அனைத்தையும் முடித்து வைக்கும்மரணத்தைக் கடவுளென்று அறிந்துகொண்டேன்

(நன்றி: அகநாழிகை, அக்டோபர், 2009)

வெள்ளை ஒயின்

புயல் நாளொன்றில்
சீறும் பெருங்கடல் முன் நானும் அவனும்
கண்களுக்குப் புலப்படா நட்சத்திரங்களென
கரைமீதிருந்தோம்

என் மீதான கவிதையொன்றை
அவன் சொல்லத் தொடங்கிய போது
கண்ணாமூச்சியாடிக் களைத்த நண்டுகள்
வளைகளை மறந்து அவன் காலருகே
கொடுக்குகள் தூக்கி நின்றன

கரங்களிலிருந்த கோப்பையின்
வெள்ளை ஒயினில் கடலின் ஒருதுளி
கலந்து அருந்தினோம்

அவன் நுனி நாக்கு சர்ப்பமென
மேலன்னம் துழாவியதில்
மூக்கின் மீதோடி உதட்டில் இறங்கிய

மழைத்துளியில்
ஆதிரத்தத்தின் வாசனை

காற்றும் மழையும் கடலும் மதுவும்
எதிரெதிரே மோதிய அலைகளில்
இனமழிந்த விலங்குளின் பெருயுத்தம்

யாரோ பெரிய பெரிய பாறைகளை
கடலின் ஊடே எறிய நடுங்கின சொற்கள்

மெல்லிய உள்ளங்கைப் பற்றுதலில்
திடீரென அகன்று விரிந்தது நீர்ப்பரப்பு

கரை சூழ்ந்த கடலில் கரங்கள் பிணைத்து
உயர்ந்தெழும் அலைகளின் மீதான பரவசத்தில்
நீந்தினோம் புயலின் பயமற்று

பதற்றமுடன் நண்டுகள்
வளையில் இறங்கிக்கொண்டிருந்தன
(நன்றி: அகநாழிகை, அக்டோபர், 2009)

ஓவியத்தில் உறைந்தவள்

ஏதேனின் விழுதுகள்
நம்மை பிணைத்திருந்தன
ஆன்மாவின் ஓவியக்கித்தானில்
உன்னுள் நுழைந்து ஆக்கிரமிக்கிறேன்
எனதிந்த வார்த்தைகளின் வழியே
கடந்து போன காலம் மறுபடியும்
நம்மை ஏந்திச் செல்கிறது பின்னோக்கி
மீண்டும் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட
பூர்ணசந்த்ரோதயப் பொழுதில்
நமது முதல் சந்திப்பு
முதல் ஸ்பரிஸம், முதல் முத்தம்
எல்லையற்று விரியும் தொடுவானில்
உனது திளைப்பின் பார்வையில் அலை
இருவரும் இடையறா முத்தங்கள் பகிரும்
ராஃபலின்
[1] கியூபிட்[2]களாய் இருந்தோம்
மாலையின் மஞ்சள் தூரிகை
உன் அருகாமையின்
கதகதப்பை தீட்டிய போது
என்னில் உருக்கிய பொன்னின்
மினுமினுப்பு கூடியது
பூங்காற்றை வீsசி படபடத்தன
இளவேனில் இரப்பைகள்
உதிர்ந்த பன்னீர் பூக்களின் முன்னிரவில்
தழுவிப்பிணைந்த நம் உடல்வழியே
இசை நதியாகியது
மிதந்தபடியே நாம்
இரவை நெய்து முடித்திருந்தோம்
ஏதேன் தன் முத்தங்களை
இன்னும் விதைத்தபடியே இருக்கிறது

(நன்றி: பவளக்கொடி, அக்டோபர், 2009)

[1] ராஃபல் ஒரு மறுமலர்ச்சிக்கால ஓவியன்,
[2] கியூபிட் ஒரு தேவ குழந்தை

Tuesday, October 6, 2009


கடற்கரையில் நேற்று மாலை கடவுளைச் சந்தித்தேன்
அலைகளின் நுரைபோலத்தான் அவரும் இருந்தார்
உரையாடிக்கொண்டே கரையோரம் நடந்த போது
வரமொன்று தரச்சொல்லிக் கேட்டேன்
கேட்கலாமெனக் கரம் பிடித்தார்
உலோகத்தின் குளிர்ச்சியுடனிருந்தது அவரது கரம்
நிமிர்ந்து விழிகளுக்குள் பார்வையைச் செலுத்தினேன்
நெருப்பின் வெப்பம் என் நாளங்களில் நகர்ந்து பரவியது
சில நட்சத்திர மீன்கள் கரையேகி வந்து எங்கள் காலருகில் வீழ்ந்தன
கடற்பறவைகள் எங்களது பேச்சைக் கேட்கும் விழைவில் தாழப் பறந்தன
அந்த உயர அலைகளையும் கரை பரந்த மணலையும்
மீன்களையும் பறவைகளையும் சாட்சியாய் வைத்து
என் தோழமை அனைத்தும் எப்போதும் நலம் வாழக் கேட்டேன்
நான்கு நாட்களுக்கு மட்டுமே வரம் பலிக்கும் என்றார் புதிர்ப் புன்னகையுடன்
எனில் ஒரு வசந்தம், ஒரு கோடை, ஒரு இலையுதிர், ஒரு பனி
என பருவத்திற்கொன்றாய் நான்கு நாட்கள் கேட்டேன்
மறுத்தவர் நான்கல்ல மூன்று கேள் என்றார்
எனில், நேற்றும் இன்றும் நாளையும் என தயக்கமின்றிச் சொன்னேன்
இல்லை, இரண்டு நாட்கள் எனக்கூறி விலகி நின்றார் கடவுள்
சரி ஒரு வெளிச்சப் பகல் நாளும் ஒரு இருள் நிறைந்த இரவு நாளும் என்றேன்
இன்னும் சற்று விலகியவர்
இல்லை, ஒர் நாள் மட்டுமே என்றார் புன்னகையற்று
வருத்தமேதுமின்றித் தலையசைத்தேன்
கேள்வியாய்ப் புருவம் உயர்த்தி அந்நாள் எந்நாள் என்றார்


கடலில் மூழ்கும் சூரியனைப் பார்த்தவாறே
‘ஒவ்வோர் நாளும்’ என அழுத்தமாய் உரைத்தேன்
வாய்விட்டுச் சிரித்த கடவுள்
அப்படியே ஆகட்டுமென ஆசீர்வதித்து மறைந்தார்.
ஆரத் தழுவிய் ஸீகல் பறவைகள்
உச்சந்தலையில் முத்தமிட்டுப் போயின

Sunday, October 4, 2009



கவிதைக்கான மனநிலையை
பருவங்கள் கொண்டுவருகின்றன
என்பதை மறுப்பதற்கில்லை
துரிதமாய் ஒலிக்கும் துக்கத்தின் தொனியுடன்
உனது சன்னமான சொற்களை கேட்டு
குளிர் விரைத்த எனதுடல் சூடுணர்கிறது
பனிமூட்டம் போன்று கவிந்திருக்கும்
புத்தகங்களும் இசையும் கவிதையுமான
இப்பருவகாலத்தில்

கவிதையோர் அடிமையாக்கும்
துர்ப்பழக்கமென்றே நினைக்கிறேன்
தீவிர சிந்தனையின் பிடியிலுள்ளோர்
அனைவருமே வாழ்க்கைக்கும் கவிதைக்கும்
அடிமைகளாயிருக்க
இரண்டுமே கைவிட இயலா
துர்ப்பழக்கமாயிருக்கின்றன

இன்னும் வலிமையோடிருப்பதற்க்கான
ஆற்றலிருக்கிறது என்னிடம்.
அர்த்தமற்ற அவசரங்களில்
என்னை தொலைத்துவிட்டுப் புலம்புகிறேன்
நேரம் ஒன்றும் ஓடிப்போகப் போவதில்லை
காலம் சுழன்று மறுபடி கொண்டுவரும்
இதே பருவங்களை என்னிடத்து

என்னுடைய மற்றெல்லா அலுவல்களையும்
முடித்துக் காத்திருக்கலாம் நம்பிக்கையுடன்
சொல்லாது விடப்பட்டவையே அதீத இசைமிகு
சொற்களாயிருக்கும் எப்போதும்

வாழ்வின் நாராசங்களுடன் இசையைக் கலப்பதும்
ஓர் இனிய பாடலாகவே இருக்கும்