Sunday, August 16, 2009




கருப்பு முகமந்திகள்
மரம் விட்டு மரம் தாவும் கணத்தில்
அந்தியின் மஞ்சள் விழுந்து முறிகிறது
அந்த நெடிய மரத்தின் மென்கிளைகள்
உதட்டில் அசைய அதன் நிழலில்
என் உயிர் உறையும் காலம்
மலைகளிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தேன்
சரிவுகளில் நேர்கோடற்றுத் துடித்துப் பறந்த
வண்ணத்துப் பூச்சிகளின் நிறமிப் புள்ளிகளை
அழிக்கத் துவங்கியது இருளின் மாயம்
அடர்ந்த மலைகளிலிருந்து வன இசை அதிர்ந்து பெருக
எவருமறியா குகைக்கோவிலொன்றின்
மண்டபம் அழைத்தது நடனமாட
அதன் அகன்ற தூண்களிலிருந்து
நர்த்தகிகள் சதங்கை குலுங்க ஓடி
மரங்களின் அடர்வுக்குள் மறைந்து
கழற்றி எறிந்த கச்சைகளில் நெளியும்
வண்ணக்கோடுகளிலிருந்து ஆதி சேஷனின்
பிளவுண்ட ஆயிரம் நாவுகள் நீள்கின்றன
வெளிச்சம் பறவையாகி
இருளுக்குள் மறையும் கணம்
என்னுடல் ஈரமாகிக்கிடந்தது
நெளிந்துகொண்டிருந்தேன்
(நன்றி : தீராநதி - ஆகஸ்ட், 2009)

No comments:

Post a Comment