
ரோமமற்ற
பரந்த ராட்ஸச மணல் மார்பில்
சிதறி கிடக்கும் கிழிந்த முலைகள்..
காற்றின் ஊழிக் கால நகங்கள்
உயிர்க்குருதியை உறிஞ்சிக் குடிக்கப்
பைத்தியவெறியால் பேயொலியுடன்
பூமியை பிறாண்டும் அகாலங்கள்...
நுண்ணிய தப்படிகள் வைத்து
தப்பித்துக் கொள்ள முயலும்
ப்ரும்மாண்டப் பாறைகளின்
இடம்பெயர்தலைக் காட்டிக் கொடுக்கும்
மணல்கோடுகள் ..
ஆனாலும் எதுவும் சலனமற்றதான
பொய்வெளிச்சத்துடன்
லட்சியம் செத்த இறந்த மனத்தைப் போல்
விரிந்து கிடக்கும் பாலைவனம் ;
இங்கே உண்டு
நமது இதயத்திலும்
பிரபஞ்சத்திலும் ..
எஸ். வைத்தீஸ்வரன்
No comments:
Post a Comment