Monday, July 6, 2009


கனல் பறக்கப் பாறைகளில் குளம்புகள் தேய்த்து
ஒற்றைக்கொம்புக்குதிரை கனைத்துத் தாவும் நள்ளிரவு
இருட்காட்டின் சருகுகள் நொறுங்க அலையும்
பசித்த ஓநாய்க் கண்களின் கூரிய பச்சை ஒளியுடன்
மயக்கமூட்டி நெருங்கும் ஒரு நிழலுருவம்
இரவின் தாபப் பெருமூச்சில் வெப்ப நதி பெருக
நிலத்தில் கிடக்கிறாள் கலைந்த ஓவியமாய்
தீரா தாகத்துடன் படருமவன் கரிய இதழ்கள்
உறிஞ்சிய இளஞ்சூட்டுக் குருதித் துடிப்பை
உச்சத்தின் முனகலோடு எதிரொலிக்கும் இருள்
தலை துண்டித்த ஆட்டுக்குட்டியாய்
உடல் துள்ளித் துடிக்க வெளியேறிய கடைசி மூச்சில்
சாத்தானின் பாடல் அதிர, வெடித்த நிலத்தில்
அகன்ற வால் சரசரக்கப் பதறி இடம்பெயரும்
முதலைகள் முரட்டுக் கால்களால்
ஒன்றையொன்று இறுகத் தழுவின
உருகிய மெழுகென பிரக்ஞையற்றுக் கிடந்தவளின்
வியர்வை பூத்துத் திறந்திருந்த மார்பில் முத்தமிட்டு
இருள் வௌவாலாய் மறைகிறான் தாகந்தீர்ந்து
பனியாய் உறைந்த அவளுடல் மீண்டும்
தாகம் மீறும் இன்னோர் இரவில்
குருதி நதியாய் விழிக்கும்
அவனருந்தும் கனவின் கரையில்

3 comments:

  1. அபாரம்
    அற்புதம்
    உங்கள் ருதுவனம் என்னை உங்கள் வாசகனாக்கியது

    ReplyDelete
  2. ayyyyyyyyyyyoooooooo....superb....

    ReplyDelete
  3. சங்க இலக்கியத்தின் அகத்தினை அடர்த்தியினை இக்கவிதையில் காண்கிறேன். என் வாழ்நாளில் இது போன்ற ஒரு கவிதையை எழுதிவிட வேண்டும். முடியுமா..... எனத் தெரியவில்லை

    ReplyDelete