Friday, March 6, 2009

பாம்பே ஜெயஸ்ரீயை
தினசரி கேட்க முடிவதில்லை
வாகாய் வந்து மடியில் உட்கார்ந்தாலும்
வண்ணத்துப்பூச்சி பிடிக்கத் தோன்றுவதில்லை
மார்கழிக் குளிரில் வாசலில் பூசணிப்பூ வைக்க
விடியல் விழிப்பு வருவதேயில்லை
வாசலில் கோலம் போட 30 வருடமாய் முயன்றும்
கோலப்பொடி விரலிடுக்குவிட்டு
கம்பியாய் விழுந்ததே இல்லை
தங்கப்பூணிட்டட பெரிய உருத்திராட்ச மாலை
அணியும் ஆசை விடவே இல்லை
இன்னும் ஜேஸுதாசுக்கு கச்சேரியின் போது
கவுரி வீசவும் கச்சேரி முடிந்ததும்
ஏலம் மிளகிட்டு சுடச்சுடப் பாலாற்றிக் கொடுக்கவும்
அம்ஜத் அலிகானுக்கு விரல் நீவி விடவும்
சோனல் மான்சிங்கிற்கு பாதச் சொடக்கெடுக்கவும்
டாலியின் மீசையில் ஊசித்தட்டன் உட்காரவைக்கவும்
மைக்கேல் ஏஞ்சலோவின் டேவிட் உதட்டில்
அழுத்தி முத்தமிடவும்
லலிதா ஜுவலர்ஸின் பனிச்சிலைக்கு பதிலாய்
உருகும் பெண்ணாய் நானிருக்க
திரண்ட மார்பில் வைரம் மின்னவும்
இன்னொரு முறை தொட்டில் குழந்தைக்குப் பாலூட்டவும்
சாகுந்தலத்தை மூலத்தில் படிக்கவும்
கண்ணகியின் சிலம்பைத் தொட்டுப் பார்க்கவும்
கொடைக்கானலின் தற்கொலைப் பாறையிலிருந்து
கூடை கூடையாய் பிளம்ஸ் உருட்டவும்
இன்னும் பல.....உம்....முடிவதேயில்லை
வேண்டாம் முடிய
என்றும் இப்படி
யே யா யோ இவள்.

2 comments:

  1. தற்கொலைப் பாறைகளில்
    ப்ளம்ஸ் பழங்கள் உருட்டி விளையாடுகிற மனம்
    புதிதானது
    உயிரை மாய்க்க போகிறவன்
    ப்ளம்ஸ் பழங்களின் வண்ணங்களில்
    அதன் உருளும் அழகில்
    ஒரு வேளை மயங்கிவிடக்கூடும்
    மரணமமென்பது தானாய் வருவது
    வரவழைத்துக்கொள்வதல்ல
    என்பதை இந்தக் காட்சிப் படுத்தலின் ஊடே
    கண்டுகொண்டேன்
    வியப்பில் அமிழ்ந்தேன்
    அய்யப்பமாதவன்

    ReplyDelete
  2. செர்ரிமரத்தில் தன்னை தூக்கிலிட்டுக்கொள்ள வறுமையின் காரணமாய் முயலும் ஒருவன் கொத்துகொத்தாய் காய்த்திருக்கும் செர்ரிப்பழங்களைப் பார்த்துவிட்டு தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வாழ்க்கைக்கு திரும்புவதாய் டேஸ்ட் ஆஃப் செர்ரி என்ற ஈரானியன் படத்தில் ஒரு காட்சியில் ஒரு கதையாய்ச் சொல்லப்படுகிறது. அதைப் போல இந்தக் கவிதையில் ப்ளம்ஸ் பழங்களின் வழியே சொல்லப்படுவது புதிய படிமமாய் இருந்தது
    அய்யப்பமாதவன்

    ReplyDelete